ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும்; கல்வி உதவித் தொகையில் ரூ.144 கோடி ஊழல்; அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் ரூ.144 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. ஆனால் ஒன்றிய அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ஊழல் நடந்துள்ளதாக நிறைய புகார்கள் வந்தன.

அதையடுத்து அமைச்சக ரீதியில் என்சிஏஇஆர் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனியார் ெசய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார துறை அமைச்சகம் சார்பில் மதரஸாக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார துறை அமைச்சகம் சார்பில் மதரஸாக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் 34 மாநிலங்களில் செயல்பட்டு வரும் மதரஸாக்கள் உட்பட 1,572 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் 21 மாநிலத்தில் செயல்படும் 830 கல்வி நிறுவனங்கள் போலியானவை அல்லது செயல்படாதவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத கல்வி நிறுவனங்கள் போலியானவை. இந்த நிறுவனங்களின் 229 அதிகாரிகள், நோடல் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கூட போலியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சக தகவலின்படி கடந்த 2007 முதல் 2022ம் ஆண்டு வரை, கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.22,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.144 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அதிகாரிகள், வங்கி நிர்வாகம் ஆகியோர் இடையில் முறைகேடுகள் நடந்துள்ளன. சட்டீஸ்கரில் 62, ராஜஸ்தானில் 99, அசாமில் 68, கர்நாடகாவில் 64, உத்தரகாண்டில் 60, மத்திய பிரதேசத்தில் 40, மேற்குவங்காளத்தில் 39, உத்தரபிரதேசத்தில் 44 கல்வி நிறுவனங்கள் போலியாக செயல்பட்டுள்ளன. இவ்விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க ேகாரி, கடந்த ஜூலை 10ம் தேதி அமைச்சகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றன.

The post ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும்; கல்வி உதவித் தொகையில் ரூ.144 கோடி ஊழல்; அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: