செய்யாறு, ஆக. 20: செய்யாறு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் ஆண்சடலம் மீட்கப்பட்டது. அவரை கொன்று சடலத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. அதனை கண்ட அவ்வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த நபர் ரோஸ் கலர் சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். கையில் ‘எஸ், எச்’ என ஆங்கில எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டு, இதயம் பொறிக்கப்பட்டிருந்தது. சடலமாக கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலிபரை கொன்று விவசாய கிணற்றில் சடலம் வீச்சா? யார் அவர்? போலீஸ் விசாரணை செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
