வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் மறக்க முடியாமல் தவிப்பு ஐடி இன்ஜினியரை காரில் கடத்தி கத்திமுனையில் தாலி கட்ட வைத்த மாஜி காதலி: காஞ்சிபுரம் வீட்டில் சிறை வைத்தவர் சிக்னல் மூலம் மீட்பு

சென்னை: காஞ்சிபுரம் கோயிலில் மாஜி காதலனை கத்திமுனையில் மிரட்டி மாஜி காதலிக்கு தாலி கட்ட வைத்து, வீட்டில் சிறையில் அடைத்து வைத்த நபரை போலீசார் மீட்டனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31), கிண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐடி இன்ஜினியராக உள்ளார். இவர், பிரியா (31) என்ற பெண்ணை கடந்த ஜூலையில் திருமணம் செய்து கொண்டார். பிரியாவும் ஒரு கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். பார்த்திபனின் அம்மா ஆஷா பிந்து (48) உடன் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மதியம் வழக்கம்போல், பார்த்திபன் வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது ஒரு கும்பல் பார்த்திபனை காரில் கடத்தி சென்றது. அந்த காரில் 2 பெண்கள், 2 ஆண்கள் இருந்துள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் ஆஷா பிந்து, மகன் கடத்தப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரை ஓடிச்சென்று மறிக்க முயன்றார். ஆனால், அவர் மீது காரை மோதிவிட்டு, படுவேகமாக நிற்காமல் சென்றுவிட்டது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த ஆஷா அங்கேயே மயங்கி விழுந்தார். இதனிடையே, ஆஷாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் தகவலறிந்து, பார்த்திபனின் மனைவி பிரியா, உடனடியாக வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பிறகு, பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து, சிக்னலை ஆய்வு செய்தபோது அது காஞ்சிபுரத்தை காட்டியது. அங்கே, பார்த்திபனை ஒரு கும்பல் வீட்டில் அடைத்து வைத்திருந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்துக்கு விரைந்து சென்று, செல்போன் சிக்னல் காட்டிய வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு, அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பார்த்திபனை போலீசார் மீட்டனர். அங்கு 4 பேர் நின்று காவல் காத்து கொண்டிருந்தனர். அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில், பார்த்திபனை கடத்தியதே அந்த பெண்தான் என தெரிந்தது. அவரது பெயர் சவுந்தர்யா (27), இவர் பார்த்திபனின் முன்னாள் காதலி.

2 பேரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். சவுந்தர்யா, ராணிப்பேட்டையை சேர்ந்தவர். இருவரும் 7 வருடம் காதலித்து உள்ளனர். ஆனால், திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பார்த்திபனின் காதலை அறிந்த பெற்றோரும், சவுந்தர்யாவை திருமணம் செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த ஏப்ரல் மாதமே இருவரும் பேசி பிரிந்து சென்றனர். இதற்கு பிறகுதான், பார்த்திபன் தனது பெற்றோர் பார்த்து வைத்த பிரியாவை திருமணம் செய்துள்ளார். 7 ஆண்டு காதலித்தும் பேச்சுவார்த்தை மூலம் பிரிந்துவிட்டாலும்கூட, பார்த்திபனை மறக்க முடியாமல் சவுந்தர்யா அவருடனான நினைவுகளை மறக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.

மேலும், இன்னொரு பெண்ணை பார்த்திபன் திருமணம் செய்து கொள்வதையும் அவரது மனது ஏற்கவில்லை. இதை தனது தாயிடமே சொல்லி கதறி அழுது வந்துள்ளார் சவுந்தர்யா. ஒருகட்டத்தில், பார்த்திபன் இல்லாமல் வாழவே முடியாது என்ற முடிவுக்கும் அவர் வந்துவிட்டார். எனவே தான், காதலன் பார்த்திபனை கடத்தி சென்று கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அவரை கடத்தப்போவதற்கான திட்டத்தை தனது குடும்பத்தினரிடமும் சொல்லியுள்ளார். இதையடுத்து, குடும்ப சகிதமாக அமர்ந்து தான், கடத்தல் திட்டத்தை போட்டுள்ளனர்.

தங்களது திட்டத்தின்படி, சவுந்தர்யாவின் தாய் உமா (50), தாய்மாமன் மகன் ராணுவ வீரர் ரமேஷ் (39), கார் டிரைவர் சித்தப்பா சிவகுமார் (48) ஆகியோரின் துணையுடன் பார்த்திபனை கடந்த 10ம் தேதி வேளச்சேரிக்கு வந்து காரில் கடத்திச் சென்றுள்ளார். வீட்டிலிருந்து கடத்தி, நேராக காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பார்த்திபனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு திடீரென கத்தியை எடுத்து பார்த்திபனை மிரட்டி உள்ளார் சவுந்தர்யா.

சாமி முன்னிலையிலும், கத்திமுனையிலும் சவுந்தர்யாவுக்கு தாலி கட்டி உள்ளார் பார்த்திபன். பிறகு மறுபடியும், காஞ்சிபுரம் வீட்டில் கொண்டு வந்து அடைத்து வைத்து விட்டு 4 பேரும் அதே அறையில் தங்கியுள்ளனர். அப்போதுதான் செல்போன் டவர் சிக்னல் மூலம் போலீசில் சிக்கிய பரபரப்பு தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பார்த்திபனை கடத்திச் சென்ற முன்னாள் காதலி சவுந்தர்யா மற்றும் அவரது தாய் உமா, தாய்மாமன் ரமேஷ், சித்தப்பா சிவகுமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் மறக்க முடியாமல் தவிப்பு ஐடி இன்ஜினியரை காரில் கடத்தி கத்திமுனையில் தாலி கட்ட வைத்த மாஜி காதலி: காஞ்சிபுரம் வீட்டில் சிறை வைத்தவர் சிக்னல் மூலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: