சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க ரூ.5.11 கோடி நன்கொடை கிடைத்தது: திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டி ஒப்படைப்பு

திருப்பதி: சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க கிடைத்த ரூ.5 கோடியே 11 லட்சத்தை, இன்று சென்னை, பாண்டிச்சேரி பிராந்திய திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் திருப்பதி மலையில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள ஏழுமலையான் கோயிலை 3 ஆண்டுகளுக்குள் முழு அளவில் விரிவாக்கம் செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து முடிக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இந்த பணிக்காக சுமார் ரூ.14 கோடியில் கோயில் அருகில் 3 பேருக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இதுவரை சுமார் ரூ.8 கோடி அளவிற்கு நன்கொடையாக பணம் வந்துள்ளது.

இந்த பணிக்காக பூதான் என்ற பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி தேவஸ்தான நிர்வாகம் நடத்தி வருகிறது. தேவஸ்தானத்தின் சென்னை கோயில் விரிவாக்க பூதான் திட்டத்துக்கு தனியார்கள் உட்பட 9 பேர் ரூ.5 கோடியே 11 லட்சம் தேவஸ்தானத்தின் சென்னை, பாண்டிச்சேரி மண்டல ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

அந்த தொகையை இன்று சேகர் ரெட்டி, திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தின் போது அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, நாளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கருணாகர ரெட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

The post சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க ரூ.5.11 கோடி நன்கொடை கிடைத்தது: திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டி ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: