கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீஸ் அதிரடி

சென்னை: கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த வாரம் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பிறகு நிருபர்களிடம் பேசும்போது, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திராவிடர் நட்பு கழகம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள், நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி சீமான் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கருத்து கூறியது தெரியவந்தது. அதைதொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரு சமூகத்துக்கு இடையே கலகத்தை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: