கமுதி, தொண்டி கோயில் ஆடி திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

கமுதி, ஆக. 4: கமுதி கண்ணார்பட்டி முப்பிடாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கமுதி கண்ணார்பட்டியில் உள்ள முப்பிடாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் மேளதாளங்களுடன் பாலகுட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பால்குடத்தை பக்தி பரவசத்துடன் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வான வேடிக்கை, மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்து முளைப்பாரியை குண்டாற்றில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கண்ணார்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்பு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு கும்மி அடித்து வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, வேல் காவடி, பறவை காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். கோயிலில் இருந்து புறப்பட்ட பாரி ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் பாவோடி மைதானம் வழியாக சென்று கடற்கரையை அடைந்தது. அனைத்து பாரியையும் கடலில் கரைத்தனர். ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கமுதி, தொண்டி கோயில் ஆடி திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: