ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1.8 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, நேற்று பகலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கி.மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடையடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

The post ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.

Related Stories: