சங்கர் நகர் காவல் நிலைய வளாகத்தில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்: தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார்

பல்லாவரம்: சங்கர்நகரில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள், இதுவரை தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து விரைவாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, போலீசார் மற்றும் பொதுமக்கள் சார்பில், புதிய மகளிர் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, பம்மல் சங்கர் நகர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு நேற்று நடந்தது. இதில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்துகொண்டு, புதிய மகளிர் காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும் இந்த மகளிருக்கான புதிய காவல் நிலையத்தில் பணிபுரிவதற்கு, ஒரு ஆய்வாளர் தலைமையில், துணை ஆய்வாளர் உள்பட 9 பெண் காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
அப்போது போலீசார், பம்மல் பகுதியில் புதிய மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம் இனிவரும் காலங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறையும் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சங்கர் நகர் காவல் நிலைய வளாகத்தில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்: தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: