செங்குன்றம் அருகே சாலை விபத்தில் டிரைவர் பலி: போலீசார் விசாரணை

புழல்: செங்குன்றம் அருகே சாலை விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, புதுச்சேரிக்கு புறப்பட்டது. இந்த லாரி, நேற்று முன்தினம் இரவு சோழவரம்- ஆத்தூர் பைபாஸ் சாலையில் சென்றது. இந்நிலையில், அங்கு பழுதாகிநின்ற இரும்பு சுருள்களை ஏற்றி வந்த லாரி மீது, காஸ் சிலிண்டர் லாரி பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரி இடிபாடுகளுக்கிடையே சிக்கிகொண்ட டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியில் இருந்த சிலிண்டர்களை பத்திரமாக அப்புறப்படுத்தி, கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். இதுதொடர்பாக, வழக்கு பதிந்த போலீசார், பலியான டிரைவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலாயுதம் (45) சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

The post செங்குன்றம் அருகே சாலை விபத்தில் டிரைவர் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: