வேலூர், ஜூலை 22: வேலூர் மாநகராட்சி காட்பாடியில் தடை செய்த பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா? என்று 30 கடைகளில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அபராதம் விதித்தனர். வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட காட்பாடியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சுஸ்மிதா மற்றும் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஸ்வீட் ஸ்டால், பெட்டிக்கடை, மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தட்டுகள், டம்ளர்களை பறிமுதல் செய்தனர். 5 கடைகளுக்கு சுமார் ₹2 ஆயிரம் வரையில் அபராதம் விதித்தனர். மொத்தம் 30 கடைகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கடைகளில் தடை செய்யப்பட்ட தட்டு, கவர்களை பதுக்கி விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.
The post தடை செய்த பிளாஸ்டிக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் 30 கடைகளில் ஆய்வு காட்பாடியில் அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.
