பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்: கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு

சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொதுப் பாடத்திட்டத்தை கொண்டு வருவதை எதிர்த்து, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டம் நடத்த உள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜன் அளித்த பேட்டி: மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், மதர்தெரசா, அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகிய 3 சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொதுப் பாடத்திட்டத்தை கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் இருந்து கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கடந்த 12ம் தேதி தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதோடு, தரமற்றதாகவும் அமைந்துவிடும் என்று தெரிவித்தனர். ஆனாலும் உயர்கல்வித் துறை அதனை ஏற்கவில்லை. இதையடுத்து கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழகங்களின் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இன்று கையெழுத்து இயக்கத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், 25ம் தேதி(செவ்வாய்க்கிழமை) பயணப் படியை திருப்பி வழங்கும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கும் எந்த பதிலும் இல்லையென்றால், பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்: கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: