தாஜ்மஹாலின் வெளிப் பகுதியைத் தொட்ட யமுனை: தாஜ்மஹால் உள்ளே தண்ணீர் வர வாய்ப்பு இல்லை என தொல்லியல்துறை தகவல்

டெல்லி: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலின் சுவர்களை 45 ஆண்டுகளில் முதல் முறையாக யமுனா நதி தொட்டுள்ளது. ஆற்றின் நீர் தசரா காட் மற்றும் இதிமாத்-உத்-தௌலாவின் கல்லறையிலும் நுழைந்துள்ளது.  இருப்பினும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது 499.1 அடியாக உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீர் மட்டம் மெஹ்தாப் பாக், ஜோஹ்ரா பாக், ராம்பாக் போன்ற மற்ற நினைவுச்சின்னங்களை மூழ்கடிக்க வாய்ப்பிருந்தாலும், அவற்றிற்க்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ள நீர் மட்டம் தாஜ்மஹால் அடித்தளத்திற்குள் நுழையவில்லை என தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 16-ம் தேதி முதல் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மீட்பு பணிகளை ஆக்ரா அரசு தீவிரப்படுத்தியுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னத்திற்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சம்பல் நதியை ஒட்டிய ஆக்ராவின் அண்டை கிராமங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், ஓக்லா அணையில் இருந்து 1,06,473 கன அடி தண்ணீரும், மதுராவின் கோகுல் தடுப்பணையில் இருந்து 1,24,302 கன அடி தண்ணீரும் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆக்ராவில் யமுனை நீரின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

The post தாஜ்மஹாலின் வெளிப் பகுதியைத் தொட்ட யமுனை: தாஜ்மஹால் உள்ளே தண்ணீர் வர வாய்ப்பு இல்லை என தொல்லியல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: