வெளி மாவட்டங்களிலிருந்து 75 ஆயிரம் டன் நெல் வரத்து

தர்மபுரி, ஜூலை 19: டெல்டா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து, 75ஆயிரம் டன் நெல் கடந்த 6 மாதத்தில் கொள்முதல் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 67 நெல் ஆலைகள் மூலம் அரவை செய்து, மக்களுக்கு பச்சரிசியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, வரட்டாறு, நாகாவதி அணை, தும்பலஅள்ளி அணை, கேசர்குழி அணை, ஈச்சம்பாடி அணைக்கட்டு ஆகிய 8 அணைகள் உள்ளன. மழைக்காலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழைநீர் அணைகளுக்கு வருகிறது. இதனால் அணைகள் உள்ள பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தும்பலஅள்ளி அணை 15ஆண்டிற்கு பிறகு நிரம்பியது. அந்த பகுதியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் எண்ணேகோல்புதூர் நீர்பாசன திட்டம் மூலம், தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 69ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டிற்கு தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் விளையும் நெல், தர்மபுரி மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொரும் வாணிப கழகம் மூலம், டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் பச்சரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். கடந்த 6 மாதத்தில் டெல்டா மாவட்டங்களிலிருந்து, 50 ஆயிரம் டன்னும், செங்கல்பட்டில் இருந்து 25ஆயிரம் டன்னும் என மொத்தம் 75ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து, தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நெல் மணிகள் தனியார் நெல் அரவை ஆலைகளில் அரைத்து, பச்சரிசியாக தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

தற்போது புழுங்கல் அரிசியும் அரைக்கும் வசதி வந்துள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, கடத்தூர், அரூர் ஆகிய இடங்களில் குடோன்கள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்திற்கு மாதம் 25ஆயிரம் டன் பச்சரிசி தேவைப்படுகிறது. இதற்காக மாதம் 30ஆயிரம் டன் நெல் டெல்டா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டு வெளிமாவட்டத்தில் இருந்து நெல் வரத்து சரிந்துள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள, இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பச்சரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வேண்டிய பச்சரிசிக்கான நெல், டெல்டா மாவட்டங்களில் இருந்து வருகிறது. மாதம் 30ஆயிரம் டன் நெல் அரசு கொள்முதல் செய்கிறது. நடப்பாண்டு கடந்த 6 மாதத்தில் 75 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 67 நெல் ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்பட்டு, பச்சரிசியாக தமிழ்நாடு நுகர்பொரும் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

The post வெளி மாவட்டங்களிலிருந்து 75 ஆயிரம் டன் நெல் வரத்து appeared first on Dinakaran.

Related Stories: