போதையில் தகராறு செய்த கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

பண்ருட்டி: தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திடீர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (39), வெல்டர். இவரது மனைவி சந்தியா. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்தி வேலை செய்து சம்பாதிக்கிற பணத்தை வீட்டுக்கு தராமல் தினமும் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும் ராமமூர்த்தி குடிப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து மனவேதனையில் இருந்து வந்த சந்தியா கணவனை பிரிந்து சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி அருகே உள்ள செம்மண்குப்பத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் ராமமூர்த்தி மனைவியை அழைத்து வருவதற்காக செம்மண்குப்பத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் சந்தியாவிடம் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். அவர் மறுக்கவே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்களை சமாதானம் செய்ய வந்த சந்தியாவின் தந்தை ராமமூர்த்தியை, வெல்டர் ராமமூர்த்தி சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தியா, அவரது தந்தை ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து வெல்டர் ராமமூர்த்தியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி உள்ளனர். இதில் மூச்சுத்திணறிய அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். இதையடுத்து இரண்டுபேரும் அங்கிருந்து தலைமறைவாயினர். சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் வெல்டர் ராமமூர்த்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் ராமமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் சந்தியா மற்றும் அவரது தந்தை ராமமூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை இருவரையும் போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ராமமூர்த்தியை பண்ருட்டி கிளை சிறையிலும், சந்தியாவை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

The post போதையில் தகராறு செய்த கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Related Stories: