நெருக்கடி மிகுந்த காலங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றும் தன்னலமற்ற அவர்களது சேவை மிகுந்த போற்றுதலுக்குரியது: சீமான் மருத்துவர் நாள் வாழ்த்து

சென்னை: மருத்துவர் நாளையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மானுட சமூகம் மட்டுமின்றி, பிற உயிரினங்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும்பணி புரியும் மருத்துவர்களை நன்றியுடன் நினைவுகூரும் மருத்துவர் நாள் இன்று. பெரும் விபத்துகள், இயற்கை பேரிடர், பெருந்தொற்று என நெருக்கடி மிகுந்த காலங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றும் தன்னலமற்ற அவர்களது சேவை மிகுந்த போற்றுதலுக்குரியது.

அதேவேளையில், நோய்களுடன் போராடி உயிர்காக்கும் பெரும்பணி புரியும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுகணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது. அரசாணை 354ன் படி அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கான ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நிறைவேற்றுவதுடன், பணிக்கேற்ற ஊக்க ஊதியம் வழங்குவதற்கான அரசாணை எண் 293ஐ செயல்படுத்துவது, பதவி உயர்வுக்கான காலத்தை 20 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகளாக குறைப்பது,

நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களை நியமிக்கமிப்பது, மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, குறைக்கப்பட்ட 950 உயர்நிலைப் பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்துவது உள்ளிட்ட மருத்துவப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தருவதே தன்னலமற்ற அவர்களின் சேவைக்கான உண்மையான அங்கீகாரமாகவும், அவர்களுக்கு நாம் செலுத்தும் மதிப்புமிகு நன்றியாகவும் இருக்கும். மருத்துவப் பெருந்தகைகளுக்கு அன்பு நிறைந்த மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

The post நெருக்கடி மிகுந்த காலங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றும் தன்னலமற்ற அவர்களது சேவை மிகுந்த போற்றுதலுக்குரியது: சீமான் மருத்துவர் நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: