மாடுகளை பூட்டி நிலத்தில் ஏர் உழுத டிப்-டாப் கலெக்டர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் 70க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஜார்த்தான்கொல்லை ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தெள்ளை வழியாக செல்லும் வழியை பயன்படுத்தி மலை அடிவாரத்திற்கு வருகின்றனர். இந்த வழியை சீரமைத்து தார்சாலை ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி இந்த தெள்ளை- ஜார்தான்கொல்லை செல்லும் மலை வழி பாதையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திமுக எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பீஞ்சமந்தை மலையில் இருந்து ஜார்த்தான்கொல்லை வரை 6 கிலோ மீட்டர் தூரம் காரிலும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பைக்கிலும் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடிவாரம் வரை கலெக்டர், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நடந்தபடியே கீழே இறங்கி வந்து மலை வழி பாதையை ஆய்வு செய்தனர். அப்போது, விறகுகளை தலையில் சுமந்து வந்த மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். விரைவில் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். பின்னர் ஜார்த்தான்கொல்லையில் உள்ள விவசாய நிலத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாடுகளை பூட்டி சிறிது நேரம் ஏர் ஓட்டினார். கலெக்டர் மாடுகளை பூட்டி ஏர் உழுத வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post மாடுகளை பூட்டி நிலத்தில் ஏர் உழுத டிப்-டாப் கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: