374 ரன்கள் அடித்த எந்த அணியும் தோற்காது: கேப்டன் ஷாய் ஹோப் வேதனை

ஹராரே: உலகக் கோப்பை 2023 தொடரின் தகுதிச் சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த 18வது லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்கள் பிரெண்டன் கிங் 76 (81), சார்லஸ் 54 (55) ஆகியோர் சிறப்பான முறையில் ரன்களை குவித்தனர். இதனைத் தொடர்ந்து ஷாய் ஹோப் 47 (38), நிகோலஸ் பூரன் 104 (65), கீமோபால் 46 (25) ஆகியோர் அதிரடியாக ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது. இமாலய இலக்கை துரத்திக் களமிறங்கிய நெதர்லாந்து அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடி அசத்தியது.

ஓபனர்கள் விக்ரமஜித் சிங் 37 (32), மாக்ஸ் ஓடோட் 36 (36) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி ஆட்டமிழந்தனர். ஆந்திரா வீரர் அதிரடி: இதனைத் தொடர்ந்து, மிடில் வரிசையில் ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமனுரு 111 (76), கேப்டன் வர்ட்ஸ் 67 (47) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி, அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதிக் கட்டத்தில் 8, 9 ஆகிய இடத்தில் களமிறங்கிய வான்பீக் 28 (14), ஆர்யன் டுட் 16 (9) ஆகியோரும் அதிரடியில் மிரட்டியதால் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 374 ரன்களை குவித்து அசத்தியது. இதனால் ஆட்டம் டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவர் போட்டியில், ஹோல்டருக்கு எதிராக நெதர்லாந்து வீரர் வான் பீக் 4, 6, 4, 6, 6, 4 என மொத்தம் 30 ரன்களை குவித்தார்.

அடுத்து, வான் பீக் சிறப்பாக பந்துவீசி சார்லஸ், சாய் ஹோப் ஆகியோருக்கு எதிராக முதல் பந்தில் சிக்சர், அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன், அடுத்த 2 பந்துகளில் 2 விக்கெட் வீழ்த்தி 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார். இதனால், நெதர்லாந்து அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது:- “374 ரன்கள் அடித்து, ஒரு அணி தோற்றதை நான் பார்த்தது கிடையாது. உண்மையில், வெற்றிபெற இந்த ஸ்கோர் போதுமானதுதான். பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருந்தாலே வெற்றிபெற்றிருக்க முடியும். இப்போது தோல்வியாளராக நிற்கிறோம். இந்த நிலையில் இருந்து மாற, ஆட்டத்தை மேம்படுத்தியே ஆக வேண்டும்’’ என்றார்.

The post 374 ரன்கள் அடித்த எந்த அணியும் தோற்காது: கேப்டன் ஷாய் ஹோப் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: