சொகுசு கார் திருடர்களின் காமெடி: பெட்டிக்கடையை டெம்போவில் கடத்துனாங்க… திரும்ப வெச்சுட்டாங்க…

குமரி மாவட்டம் கொல்லங்கோடு, மஞ்சத்தோப்பை சேர்ந்தவர் இந்திரா மேபல் (53). வீட்டு முன் சுய உதவி குழு மூலம் கடன் வாங்கி இரும்பாலான பெட்டிக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 14ம் தேதி நள்ளிரவில் மர்மநபர்கள் அதை அலேக்காக தூக்கி சென்றனர். புகாரின்படி கொல்லங்கோடு போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். ஒரு மினி டெம்போ மற்றும் சொகுசு காரில் நள்ளிரவில் வந்த 5 பேர், பெட்டிக்கடையை தூக்கிச் சென்றது பதிவாகியிருந்தது.

விசாரணையில் மினி டெம்போ மருதங்கோடு பகுதியிலும், சொகுசு கார் திருவட்டார் பகுதியை சேர்ந்தது என்றும், பனச்சமூடு அருகே தோலடி என்னுமிடத்தை சேர்ந்தவரின் தலைமையில் கும்பல் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கொல்லங்கோடு போலீசார், 5 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மஞ்சதோப்பு பகுதிக்கு ஒரு மினி டெம்போவில் அதே கும்பலில் 3 பேர் வந்து 200 மீட்டர் தூரத்தில் மஞ்சதோப்பு -பாலவிளை சாலையில் இரும்பு பெட்டிக்கடையை இறக்கி வைத்துள்ளனர்.

இதை பைக்கில் வந்த அரசு பஸ் டிரைவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். உடனே மினி டெம்போ டிரைவர் செல்போனை தட்டி விட்டு பறந்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது கும்பல் பெட்டிக்கடையை இறக்கி வைக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சொகுசு கார் திருடர்களின் காமெடி: பெட்டிக்கடையை டெம்போவில் கடத்துனாங்க… திரும்ப வெச்சுட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: