திப்பத்தூர் அருகே ஏரியில் இறங்கி விளையாடிய அக்கா, தங்கை மூழ்கி பலி

திருப்பத்தூர், ஜூன் 12: திருப்பத்தூர் அருகே ஏரியில் இறங்கி விளையாடிய அக்கா, தங்கை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் அடுத்த கல் நார்சாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(40), விஷமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா(33). இவர்களது மகள்கள் லட்சிகா(12), ரேஷ்மா(10). புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் லட்சிகா 6ம் வகுப்பு முடித்துவிட்டு இந்தாண்டு 7ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். ரேஷ்மா புதூர் பூங்குளம் பள்ளியில் 4ம் வகுப்பு முடித்துவிட்டு, 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் புதூர் பூங்குளத்தில் உள்ள லதாவின் தாய் வீடான, பாட்டி ரஞ்சிதம் வீட்டில் லட்சிகா, ரேஷ்மா ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ரஞ்சிதம் அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக மோட்டூர் ஏரிக்கு ஓட்டிச்சென்றார். அப்போது லட்சிகா, ரேஷ்மா ஆகியோரும் அவருடன் சென்றனர். தொடர்ந்து ஏரியில் லட்சிகாவும், ரேஷ்மாவும் ஏரியில் விளையாட இறங்கியதாக தெரிகிறது.

ஆனால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். பேத்திகளை காணாமல் தேடிய ரஞ்சிதம் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்து கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லட்சிகாகவும், ரேஷ்மாவும் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஏரியில் விளையாடிய அக்கா, தங்கை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திப்பத்தூர் அருகே ஏரியில் இறங்கி விளையாடிய அக்கா, தங்கை மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: