பிரசவத்தின் போது பிரச்னையே வராது; சுந்தரகாண்டம், ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: கர்ப்பிணிகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுரை

புதுடெல்லி: கர்ப்பிணிகள் தினமும் சுந்தர காண்டம் படித்து வந்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பா சன்ஸ்கார் திட்ட துவக்க நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.

இதை ஆன்லைன் மூலம் துவக்கி வைத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்:
விஞ்ஞானபூர்வமாகவும்,ஆன்மீக முறையிலும் கர்ப்பிணிகள் தினமும் சுந்தர காண்டம் படித்து வந்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். இந்த அணுகுமுறை கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. கிராமங்களில் கருவுற்ற பெண்கள் ராமாயணம், மகாபாராதம் மற்றும் பல நல்ல கதைகளை படிக்க வேண்டும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கும்.

இது போல் ராமாயணம்,மகாபாரதம் படிப்பதால் பிரசவத்தின்போது பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதே போல் பிறக்கும் குழந்தைகளும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் யோகாசனம் செய்து வந்தால், வயிற்றில் இருக்கும் கரு மட்டுமில்லாமல் தாய்க்கும் ஆரோக்கியம் அளிக்கும். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினாலே பிரசவக்காலம் இனிமையாக இருக்கும், சுகமான பிரசவம் நடக்கும்’’ என்றார்.

The post பிரசவத்தின் போது பிரச்னையே வராது; சுந்தரகாண்டம், ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: கர்ப்பிணிகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: