புதுச்சேரி ரவுடிகள் வெட்டிக் கொலை

வானூர்: புதுவையை சேர்ந்த 2 ரவுடிகளை பைக்குகளில் வந்த கும்பல் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்(34). ரவுடியான இவர் வில்லியனூர் பகுதியில் கடந்த 2 வருடத்துக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளி. இவரது கூட்டாளி வில்லியனூர் கோர்க்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன் (32). நேற்று காலை இருவரும் ஒரே பைக்கில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து செங்கமேடு வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து பைக்குகளில் வந்த 7 பேர் திடீரென இருவரையும் வழிமறித்து அரிவாள்களால் வெட்டினர்.

பயந்துபோன இருவரும் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது விரட்டி சென்று தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்துவிட்டு கும்பல் தப்பியது. தகவல் அறிந்து விழுப்புரம் எஸ்பி சசான்சாய் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து வானூர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், அருண், அன்பரசன் இருவரும் வழக்கு தொடர்பாக மயிலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக பைக்கில் சென்றுள்ளனர்.

அப்போது, இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வில்லியனூர் பகுதியில் உள்ள வேறு ரவுடி கோஷ்டிகளுடன் இவர்களுக்கு தகராறு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post புதுச்சேரி ரவுடிகள் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: