கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு

திருமலை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதிராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் விரைவில் இணைவது உறுதியாகியுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரை சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று அரசியலில் இணைய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் எந்த கட்சியில் இணைவார் என தெரிவிக்காமல் இருந்து வந்தார். கடந்த மாதம் 11ம்தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை அம்பதிராயுடு திடீரென சந்தித்தார். அதன்பின்னர் நேற்று மீண்டும் முதல்வரை சந்தித்தார். தாடேபள்ளியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்தது.

இந்த சந்திப்பின்போது அம்பதிராயுடு கடைசியாக விளையாடிய ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோப்பையுடன் வந்து சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒய்எஸ்ஆர் கட்சியில் அவர் இணைவது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், விரைவில் முறைப்படி அம்பதிராயுடு ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைவார். அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது குண்டூர் எம்.பி. தொகுதிக்கோ அல்லது பொன்னூர் சட்டமன்ற தொகுதிக்கோ அவர் நிறுத்தப்படலாம்.
ஐபிஎல் கடைசி போட்டியில் விளையாடிய அம்பதிராயுடு கடந்த மே 30ம்தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இனி எனது 2வது பக்கத்தை அனைவரும் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் அவரது அரசியல் பயணம் ஜெகன்மோகன் கட்சியில் தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

The post கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: