சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 17 வழக்குகள் பதிவு: 29 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 41 கிலோ கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள், 385 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 650 கிராம் மெத்தகுலோன் போதைப்பொருள், 1 செல்போன், ரொக்கம் ரூ.1,650/-, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 02.06.2023 முதல் 08.06.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 குற்றவாளிகள் கைது செய்து 41 கிலோ கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள், 385 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 650 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப்பொருள், 1 செல்போன், ரொக்கம் ரூ.1,650/-, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 02.06.2023 அன்று கோடம்பாக்கம், ஆற்காடு ரோடு அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மாலிக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 02.06.2023 அன்று காலை, இராயப்பேட்டை, T.P.K ரோடு மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த ரோஹித், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 பல்சர் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 03.06.2023 அன்று பெரியமேடு, மூர் மார்க்கெட் வளாகம், அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கபிலன், வ/25, த/பெ.சேகர், எண்:489 தீத்தகுடி, கட்டியன்யிருப்பு, நாகப்பட்டினம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Flower Bazaar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 06.06.2023 அன்று, சென்டிரல் இரயில் நிலையம் அருகில் ஐசக் தெருவில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த பாபுலு பரால், வ/31, த/பெ.ஹரி பரால், பில்லிபடா கிராமம், பூரி, ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், கடந்த 07.06.2023 அன்று தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் தெருவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த அப்துல் கரீம், வ/24, த/பெ.முகமது யூசுப், வள்ளுவர் நகர் 7வது தெரு, எண்ணூர் கைது செய்தனர். அவரிடமிருந்து 650 கிராம் எடை கொண்ட மெத்தக்குலோன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 02.06.2023 அன்று காலை, கொடுங்கையூர், சந்திரசேகர நகர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த .ரஞ்சித்குமார் (எ) பெரிய பாம்பு, வ/27, த/பெ.ஆறுமுகம், சந்திரசேகர் நகர் 7வது தெரு, கொடுங்கையூர், இவரது மனைவி .அமுதவள்ளி (எ) திவ்யா, பெ/வ.25, க/பெ.ரஞ்சித்குமார், .அருண் (எ) சொட்டை, வ/21, த/பெ.முத்துகுமரன், எம்.ஜி.ஆர். நகர் 8வது தெரு, கொடுங்கையூர், அருள்ராஜ், வ/23, த/பெ.குமார், எம்.ஜி.ஆர். நகர் 9வது தெரு, கொடுங்கையூர் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 200 கிராம் கஞ்சா மற்றும் 250 Tapnice என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 17 வழக்குகள் பதிவு: 29 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: