லிப்ட் கொடுப்பதுபோல் நடித்து வழிப்பறி கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (29). இவர் மணலியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ் கீப்பிங் வேலைசெய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்ததும், இவர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம், சீனிவாசன் லிப்ட் கேட்டுள்ளார். அவர்களும் லிப்ட் தருவது போல் நடித்து பைக்கில் சீனிவாசனை ஏற்றிக்கொண்டு சிறிதுதூரம் சென்றனர். பின்னர் மேலும் ஒருவரை வரவழைத்து மூவரும் கூட்டாக சேர்ந்து சீனிவாசனை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ₹1,500 பணத்தை பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சீனிவாசன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (27), சஞ்சய் (20), வேலன் (18) ஆகிய 3 பேரும் இந்த செயலில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹1,500 மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் வேலன், கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

The post லிப்ட் கொடுப்பதுபோல் நடித்து வழிப்பறி கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: