விமான பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்களை நள்ளிரவு வரை இயக்க ஆலோசனை: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக, நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்களை இயக்க ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் அலுவலக நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. அதே போல் பரங்கிமலை – சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் சேவை தினசரி காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நள்ளிரவில் விமானம் மூலம் சென்னை வரும், பயணிகளுக்காக நள்ளிரவு 12 மணி வரை ரயில் சேவையை நீட்டித்து இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.

The post விமான பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்களை நள்ளிரவு வரை இயக்க ஆலோசனை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: