ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள வீட்டை ஜப்தி செய்ய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு: விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தங்கி இருக்கும் வீட்டை ஜப்தி செய்ய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் தொழிலதிபர் லிங்கமனேனி ரமேஷின் வீட்டை ஜப்தி செய்ய அனுமதி வழங்கக்கோரி விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இம்மாதம் 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில் சிஐடி சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒய்.என்.விவேகானந்தா வாதங்களை முன் வைத்தார். அதில் குற்றவியல் சட்டத் திருத்த ஆணை-1944 விதிகளின்படி கடந்த ஆண்டு மே மாதம், தலைநகர் மாஸ்டர் பிளான் மற்றும் உள்வட்ட சாலை சீரமைப்பு மாற்றத்தில் ஊழல் நடந்ததாக பலர் மீது சிஐடி வழக்கு பதிவு செய்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் லிங்கமனேனி ரமேஷின் வீட்டையும், முன்னாள் அமைச்சர் நாராயணாவின் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகளையும் சிஐடி பறிமுதல் செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இந்த ஆண்டு மே 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. எனவே ஜப்தி செய்ய 2 தனித்தனி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹிமாபிந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ‘கோப்புகளை முன்னாள் அமைச்சர் நாராயணனிடம் ஒப்படைக்க வேண்டும். வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு அளிப்பதற்கு முன்பு அடிப்படை ஆதாரங்களை ஆய்வு செய்து தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும் அடுத்தக்கட்ட விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

The post ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள வீட்டை ஜப்தி செய்ய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு: விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: