ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையில் இருந்து கடத்திவந்த தங்கத்தை கடலில் வீசிய விவகாரம்: 3வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நொச்சியூரணி கடற்கரை பகுதியில் கடத்தல்காரர்களால் தங்கம் கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் முத்துக்குளிக்கும் வீரர்கள் உதவியுடன் அதிகாரிகள் 3வது நாளாக தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிஅருகே அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் கடலில் வீசியதாக கிடைத்த தகவலின் பேரில் 3வது நாளாக அப்பகுதியில் முத்துக்குளிக்கும் வீரர்களை வைத்து கடலோர காவல்படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பைபர் படகுகள் மூலம் தங்கம் கடத்திவரப்படுத்தாக கிடைத்த தகவலின் பேரில் அன்று அதிகாலை முதலே சுங்கத்துறை அதிகாரிகள் கடலோர காவல்படை உதவியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பைபர் படகு ஒன்று வந்துள்ளது.

அதிகாரிகளை கண்டதும் படகில் வந்தவர்கள் உச்சிப்புளி அருகே படகை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தப்பிச்சென்றவர்கள் நிறுத்தி சென்ற படகை சோதனையிட்டபோது அதில் சுமார் 4 முதல் 5 கிலோ மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விசாரித்து வந்த நிலையில், படகில் வந்தவர்கள் மேலும் தங்கத்தை கடலில் வீசியதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று கடலில் தேடி வந்த நிலையில் காற்றின் வேகத்தின் காரணமாக தேடுதல் பனி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட முத்துக்குளிக்கும் வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் ஆகியோர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே மண்டபம் பகுதியில் கடலில் வீசப்பட்ட தங்கத்தை தூத்துக்குடி முத்துக்குளிக்கும் வீரர்கள் தான் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 3 முறை கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீசியதும், வீசப்பட்ட தங்கத்தில் விலை சுமார் ரூ.50 கோடி இருக்கும் என ராமநாதபுர அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று தங்கத்தை கடலில் வீசுவது வழக்கமாகி வருகிறது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையில் இருந்து கடத்திவந்த தங்கத்தை கடலில் வீசிய விவகாரம்: 3வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: