மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் தேர்தல்: ஐஓஏ தலைவர் பி.டி.உஷா உறுதி

சோனாபட்: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி தொடர் போராட்டங்களை செய்து வருகின்றனர். இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட செயல்களை கவனிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை நியமித்த இந்திய ஒலிம்பிக் சங்கம், 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தப்படி 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜூன் 17ம் தேதியுடன் 45 நாட்கள் கெடு முடிவடைய உள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறியதாவது, “கூட்டமைப்பின் தேர்தலை விட இளைய மல்யுத்த வீரர்களை தேர்வு செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக தேர்தலை விட குழந்தைகளின் சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேர்தலில் கவனம் செலுத்தினால் குழந்தைகளுக்கான சோதனைகளை நடத்துவது பாதிக்கப்படும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் தேர்தல்: ஐஓஏ தலைவர் பி.டி.உஷா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: