போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்தவர் தற்கொலை போலீசார் விசாரணை செய்யாறு அருகே மாணவி கர்ப்பம்

செய்யாறு, ஜூன் 6: செய்யாறு அருகே மாணவி கர்ப்பமானது தொடர்பாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது உறவினர் முறையான பெரியப்பா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. 9ம் வகுப்பு படித்துள்ள இவர் 10ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வசித்து வருவதால் மாணவி தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் பெரியப்பா உறவுமுறையான அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(48) என்பவர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தொடர்ந்து பலமுறை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மாணவி 3 மாத கர்ப்பிணியானார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் நேற்றுமுன்தினம் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்தியை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்தி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வந்து கார்த்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்தி போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்தவர் தற்கொலை போலீசார் விசாரணை செய்யாறு அருகே மாணவி கர்ப்பம் appeared first on Dinakaran.

Related Stories: