திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி

* நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம்
* ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை, ஜூன் 6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணி நடைபெறுவதால், நாளை முதல் திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் தேரோடும் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி, சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ₹20 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதையொட்டி, மாட வீதியின் இருபுறமும் நிரந்தர வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மின் கம்பங்களை மாற்றி, புதைவட மின்தடங்களாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. அதேபோல், பாதாள சாக்கடை பைப்லைன்கள், குடிநீர் பைப்லைன்களை சாலையோரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த பணிகளை வரும் தீபத்திருவிழாவுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மாடவீதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக, சாலை போக்குவரத்தில் நாளை முதல் (7ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமலை திருவூடல் தெரு – பேகோபுரத்தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோயில்) முதல் வடஒத்தவாடைத் தெரு வரையில் உள்ள சாலை, நாளை முதல் இப்பணி முடியும் வரை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்த சாலை மூடப்படுவதால் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

எனவே, தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சிலையிலிருந்து, கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேகோபுரத் தெரு வழியாக நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையிலிருந்து, கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். தேரடி தெருவிலிருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும், காந்திசிலை அருகே பூதநாராயணப்பெருமாள் கோவில், சின்னக்கடைத் தெரு வழியாக செல்ல வேண்டும். செங்கம் சாலையிலிருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும், செங்கம் சாலை சந்திப்பிலிருந்து கிரிவலப்பாதை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். நகரின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் மாட வீதி மேம்பாட்டுப் பணிக்காக, இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி appeared first on Dinakaran.

Related Stories: