அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: கோயம்பேட்டில், அரசு பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கோயம்பேடு பேருந்துநிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது. கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகம் அருகே வந்தபோது, குடிபோதையில் ஒரு வாலிபர் பேருந்தை வழி மறித்து, ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தை நிறுத்திய டிரைவர் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரிடம் பேருந்து செல்ல வழிவிட சொன்னார்.

இதனால், ஆத்திரமடைந்த அவ்வாலிபர் அருகே இருந்த கல்லை எடுத்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினார். உடனே பேருந்து டிரைவர் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் கோயம்பேடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்த மூர்த்தி (22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: