சிறுபாலத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், ஜூன் 4: ஒடுகத்தூர் அருகே சிறுபாலத்தில் கார் கவிழ்ந்து திருப்பத்தூரை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெடுமியூரை சேர்ந்தவர் சுலோச்சனா(57). இவரது மகன் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதால் அவரை வழியனுப்ப உறவினர்கள் 5 பேருடன் நேற்று முன்தினம் மாலை தனது காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். மகனை வழியனுப்பி விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு ஒடுகத்தூர்- ஆலங்காயம் வழியில் சென்றபோது, போடிப்பேட்டை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த சிறு பாலத்தில் இருந்து இருந்து தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுலோச்சனா உள்பட உறவினர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுலோச்சனா வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுபாலத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Related Stories: