விளைநிலங்களாக மாறும் தரிசு நிலங்கள்

நாமக்கல், ஜூன் 4: கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித்திட்டத்தில், தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாறுகிறது. இத்திட்டத்தின் பயன் குறித்து, விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நடத்தினார். தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை, பயிர் செய்ய ஏற்ற நிலமாக மாற்றும் வகையில், கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை ஒருங்கிணைந்து, கிராமங்களில் சாகுபடி செய்யாமல் தரிசு நிலங்களாக இருப்பதை, சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, பயிர் செய்யவும், அதிக மகசூல் பெற்று விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழி வகை செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம், கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து முட்புதர்களை அகற்றி, உழவு செய்து பயிர் சாகுபடிக்கேற்ற நிலமாக மாற்ற வேண்டும். அந்த நிலத்தில் வயல் வரப்புகளில் நீண்ட காலம் வளர்த்து பயன்பெறும் வகையில், மா, வேம்பு, தேக்கு, மருதமரம், கருநாவல் மரம் போன்ற மரக்கன்றுகள் தேவையான அளவுக்கு, விலையின்றி வழங்கப்படுகிறது. அதேபோல், நெல் விதைகள், நிலக்கடலை, பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மற்றும் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்திலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாடு ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர் சாகுபடியுடன் கறவை மாடுகள், எருமை, ஆடுகள், செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், பயன் தரும் மரக்கன்றுகள், பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய இனங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் நீடித்த நிலையான வருமானமும், நிலவளமும் பெறுவதுடன். விவசாய குடும்பங்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிபட்டியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், ஆண்டி என்பவர் நிலக்கடலை பயிரிடப்பட்டு சாகுபடி செய்துள்ளதை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம், வேளாண் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்ததோடு, தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ளும்படி விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நாவல்பட்டியில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், விவசாயி செல்லபாபு என்பவர் பயிர் சாகுபடியுடன் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருவதை, கலெக்டர் பார்வையிட்டு விவசாய நடைமுறைகளை கேட்டறிந்தார். பின்னர், நாமகிரிப்பேட்டையில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன தானிய கிடங்கு, ஏல கொட்டகையை கலெக்டர், பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் துரைசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், உதவி இயக்குநர் (வேளாண்மை) உமா, தாசில்தார் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post விளைநிலங்களாக மாறும் தரிசு நிலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: