ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழா; மின்கம்பத்தில் ஏறி தலைகீழாக தொங்கி வாலிபர் சாகச நடனம்: வலைத்தளங்களில் வீடியோ வைரல்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழாவில், மின் கம்பத்தில் ஏறிய வாலிபர், தலைகீழாக தொங்கியபடி சாகச நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், வரத கவுண்டர் வட்டம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. அப்போது பெண்கள் தலையில் கூழ் குடத்துடன் ஊர்வலமாக வந்து கொப்பரையில் கூழ் வார்த்து வழிபட்டனர்.

முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்களுடன் வந்தபோது, அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த பாரதிதாசன் என்ற வாலிபர், அங்கிருந்த மின் கம்பத்தின் மீது ஏறி, கால்களால் கம்பத்தை பின்னிக்கொண்டு தலைகீழாக தொங்கியபடி சாகச நடனமாடினார். பின்னர் தலைகீழாக இறங்கியவரை, சிலர் தாங்கி பிடித்து இறக்கிவிட்டனர். இதை சிலர் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதை பார்த்து மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஊர்வலம் செல்லும்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஊர்வலம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் வாலிபருக்கு அசம்பாவிதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழா; மின்கம்பத்தில் ஏறி தலைகீழாக தொங்கி வாலிபர் சாகச நடனம்: வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: