ஒடிசா மாநில தலைமை செயலாளர் ஜெனா நெகிழ்ச்சி: ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்!

புபனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ர யில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த 900க்கும் மேற்பட்டவர்கள் பாலாஷோர் , மயூர்பஞ்ச், பர்தக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.

இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா மாநில தலைமை செயலாளர் ஜெனா நெகிழ்ச்சி: ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்! appeared first on Dinakaran.

Related Stories: