திருமலை: திருப்பதி மலைப்பாதையில் தொடர் விபத்துகள் தடுக்க இனி முழுமையான தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் அலிபிரி வழியாக மலைப்பாதையில் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
பக்தர்களின் பாதுகாப்புக்காக திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய அதிநவீன இயந்திரங்கள் அமைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அலிபிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்ய தாமதம் ஆவதால் பக்தர்கள் பொறுமையிழக்கக்கூடாது. வாகன தணிக்கை வரிசைகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும்.
திருப்பதி மலைப்பாதையில் சமீபகாலமாக விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்களின் பிட்னஸ் சரிபார்த்த பின்னரே மலைப்பாதையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளோம். அதாவது வாகனத்தில் இன்சூரன்ஸ், பிரேக், எஸ்கலேட்டர் உள்பட முழு தகுதியிருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல் டிரைவர்களும் முழு உடல் தகுதி உள்ளிட்டவை இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும். திருமலைக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வருவதை முற்றிலும் தடுக்க செக்கிங் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருப்பதி மலைப்பாதையில் செல்ல முழு தகுதியுள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.