மண்ணடி பகுதியில் நடைபாதையில் தூங்கிய பெண் கார் மோதியதில் பரிதாப பலி: டிரைவர் கைது


தண்டையார்பேட்டை: மண்ணடி பகுதியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பெண் மீது, நள்ளிரவில் கார் மோதியதில் உடல் நசுங்கி பலியானார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரை கைது செய்தனர். மண்ணடி, லிங்கி செட்டி தெரு சந்திப்பில் உள்ள நடைபாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அந்த பகுதி மக்கள், வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு பெண்ணும், ஆணும் ஒன்றாக நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, அந்த பெண் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் உருண்டு படுத்துள்ளார். இதனை கவனிக்காத கார் டிரைவர், அந்தப் பெண் மீது காரை ஏற்றிவிட்டுச் சென்றது பதிவாகி இருந்தது.

இதையடுத்து, கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்தியவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த டிரைவர் பாண்டியன் (எ) தமிழரசன் (24) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான போலீசார், இறந்துபோன பெண் யார், அவருடன் படுத்திருந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தமிழரசனை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர் ஓட்டிய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்ணடி பகுதியில் நடைபாதையில் தூங்கிய பெண் கார் மோதியதில் பரிதாப பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: