திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றில் குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை

அடையாறு: திருவிக பாலம் அருகே, அடையாறு ஆற்றில் குதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளி, முதல் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (36). இவர், வேளச்சேரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் கால்சென்டர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ராமச்சந்திரன் பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், நேற்று முன்தினம் இரவு வரை, அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அவரது தந்தை லோகநாதன், அடையாறு திருவிக பாலத்தின் நடுவே ராமச்சந்திரனின் பைக் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு அடையாறு போலீசார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். காணாமல் போன நபர் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றுக்குள் குதித்தது உறுதியானால் மட்டுமே, நாங்கள் இறங்கி தேட முடியும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் அடையாறு திருவிக நகர் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் ராமச்சந்திரனின் உடல் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்து சைதாப்பேட்டை, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, ரப்பர் படகில் சென்று, பாலத்தின் அடியில் சிக்கியிருந்த ராமச்சந்திரனின் சடலத்தை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர், சடலத்தை போலீசார் கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில், அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அவர் கடந்த ஒரு வருடமாக தீவிர மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றில் குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: