2 குழந்தைகளின் தாய் தற்கொலை சப்-கலெக்டர் விசாரணை செய்யாறு அருகே

செய்யாறு, ஜூன் 2: செய்யாறு அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். சிப்காட்டில் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (26). இருவரும் காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வுடன் காணப்பட்டார். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய சிலம்பரசன், மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரேவதியின் தந்தை ராஜி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post 2 குழந்தைகளின் தாய் தற்கொலை சப்-கலெக்டர் விசாரணை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: