பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா சிட்சிபாஸ் முன்னேற்றம்

பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடக்கிறது. அங்கு நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை யெலினா ஸ்விடோலினா(28வயது, 192வது ரேங்க்), அமெரிக்காவின் ஸ்டோர்ம் ஹன்டர்(28வயது, 204வது ரேங்க்) ஆகியோர் மோதினர். மகப்பேறுக்கு பிறகு களம் இறங்கிய ஸ்விடோலினா, பிரெஞ்ச் ஓபனின் முதல் சுற்றில்தான் முதல் வெற்றியை சுவைத்தார். அதே உற்சாகத்துடன் நேற்று களமிறங்கினாலும் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்தார்.

அடுத்த 2 செட்களில் கூடுதல் வேகம் பெற்ற ஸ்விடோலினா அவற்றை 6-3, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 49 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(24வயது, 5வது ரேங்க்) உடன் ஸ்பெயின் வீரர் ரொபர்டோ கார்பலேஸ்(30வயது,57வது ரேங்க்) மோதினர். அதில் சிட்சிபாஸ் 2 மணி 16நிமிடங்களில் 6-3, 7-6(7-4), 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் எல்லீஸ் மார்டென்ஸ்(27வயது, 28வது ரேங்க்), ஜெசிகா பெகுலா(29வயது, 3வது ரேங்க்), பேடன் ஸ்டெர்ன்ஸ்(21வயது, 69வது ரேங்க்) ஆகியோரும் 3வது சுற்றில் விளையாட உள்ளனர்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா சிட்சிபாஸ் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: