ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை சென்னையில் சந்தித்து பேசுகிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய பாஜ அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆதரவு திரட்டி வருகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை பெற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்ப வலியுறுத்தி வருகிறார்.

மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள மசோதாவை எதிர்க்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். மேலும், கட்சி தலைவர்களான சந்திரசேகர் ராவ், நிதிஷ்குமார், சரத்பவார், உத்தவ் தாக்கரே, மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை சென்னையில் சந்தித்து பேசுகிறார். மேலும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று மாலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

The post ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: