மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக வெளியான செய்திக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள பதில் அறிக்கை: சிவக்குமார் பதவிப்பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

காவிரி பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்பு பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். அதுவரை சிவக்குமார் பொறுமை காப்பார் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: