பொதுஅதிகார பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வீடு அபகரித்த தம்பதிக்கு 3 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டை அபகரித்த தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2005ம் ஆண்டு, அருணா வெங்கட்ராமன் என்பவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. வீட்டை கல்யாண சுந்தரராமன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அருணா வெங்கட்ராமன் தனது நண்பரான மந்தைவெளியைச் சேர்ந்த சவுந்தரராஜன் பெயரில் பொது அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

கல்யாண சுந்தரராமன் வீட்டுக்கான முன்பணத்தை அருணா வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார். ஆனால், பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்தி சவுந்தரராஜன் அந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் பெயருக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக தனது மனைவி கல்பகம் பெயரில் மோசடியாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கல்யாண சுந்தரராமன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சவுந்தரராஜன் மற்றும் அவரது மனைவி கல்பகம்ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை அல்லி குளத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ராஜேஷ்ராஜூ முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சவுந்தரராஜன் மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், கல்யாணசுந்தரராமனுக்கு நஷ்ட ஈடாக 1 கோடியே 9 லட்ச ரூபாயை 3 மாத காலத்தில் சவுந்தரராஜன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post பொதுஅதிகார பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வீடு அபகரித்த தம்பதிக்கு 3 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: