சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சுய உதவிக்குழு, கைவினை கலைஞர் தனிநபருக்கு கடன்கள், கல்வி கடன்: கலெக்டர் தகவல்

சென்னை: சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் தனிநபர், சுய உதவிக் குழுக்கள், கைவினை கலை ஞர்களுக்கு கடன்கள், கல்விகடன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விகடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

* திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ₹1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ₹98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
* திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ₹8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* திட்டம் 1ன் கீழ்தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டிவிகிதத்திலும், அதிகபட்ச கடனாக ₹20,00,000ம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ₹30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
* கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ₹10,00,000 வரை வழங்கப்படுகிறது.
* சுயஉதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ₹1,00,000, ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
* திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும், நபர் ஒருவருக்கு ₹1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
* சிறுபான்மை மாணவ, மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1ன் கீழ் ₹20,00,000 வரையில், 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ₹30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சுய உதவிக்குழு, கைவினை கலைஞர் தனிநபருக்கு கடன்கள், கல்வி கடன்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: