மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு குக்கி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 3ம்தேதி இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தினர். கலவரத்துக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் போலீஸார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு நேற்று மாலை சென்றார். 3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் அமித் ஷா மற்றும் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் இடையே நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: