மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை (யூ.பி.ஐ) வசதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவர். இந்த சேவை மூலமாக தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளது.

மேலும் இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் என்.இ.எஃப்.டி மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். அதேபோல, ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது என்பது தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: