குட்கா விற்பதை போலீசுக்கு கூறியதாக டெய்லருக்கு ஓட ஓட சரமாரி வெட்டு தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு வலை செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, மே 23: செய்யாாறு அருகே குட்கா விற்பதை போலீசுக்கு கூறியதாக ஏற்பட்ட முன்விரோதத்தில், டெய்லரை ஓட ஓட சரமாரி வெட்டிய தந்தை, 2 மகன்கள் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன்(42), மாற்றுத்திறனாளியான இவர் டெய்லராக உள்ளார். இவரது மனைவி வசந்தா(40). தம்பதிக்கு குழந்தைகள் பார்த்தீபன்(15), யுவ(13) உள்ளனர். அதேகிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் அஜீத், நாகமணி. ஏழுமலையும், அவரது மகன்களும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்றதாக சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு வரதன் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கியும் உள்ளனர். இதனால், வரதன் தனது குடும்பத்துடன் நல்லூரில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராம ரோட்டு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டு பாதை வழியாக வரதன் நடந்து சென்றபோது பின் புறமாக ஒரே பைக்கில் வந்த ஏழுமலை, அவரது மகன்கள் அஜீத், நாகமணி உட்பட 5 பேர் வரதனை கத்தியால் வெட்டி உள்ளனர். அவர்களிடம் இருந்து வரதன் தப்பி ஓடினார். ஆனால் 5 பேர் கும்பல் வரதனை ஓட ஓட சரமாரி வெட்டியது. இதில் வரதன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு 5 பேரும் தப்பிச்சென்றனர். சரமாரி வெட்டு விழுந்த வரதன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக பதறியடித்து ஓடி வந்த குடும்பத்தினர் வரதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். மேலும் அப்பகுதியினர் உடனடியாக தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று வரதனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தூசி போலீசில் வரதன் மனைவி வசந்தா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஏழுமலை, அவரது மகன்கள் அஜீத், நாகமணி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குட்கா விற்பதை போலீசுக்கு கூறியதாக டெய்லருக்கு ஓட ஓட சரமாரி வெட்டு தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு வலை செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: