சோப்பு விற்பதாக வந்த கும்பல் பெண்ணிடம் நூதன மோசடி போலீசில் புகார்

குடியாத்தம், மே 23: குடியாத்தம் அருகே சோப்பு விற்பதாக வந்த கும்பல், பெண்ணிடம் ஆசைவார்த்தை ₹10 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மனைவி சசிகலா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் சென்னை கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்திற்காக சோப்பு விற்பனை செய்வதாக சசிகலாவிடம் கூறியுள்ளனர். மேலும், தங்களிடம் சோப்பு வாங்குபவர்களுக்கு தரும் பரிசு கூப்பனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கிடைப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சசிகலா ₹200 கொடுத்து சோப்பு வாங்கி உள்ளார். அதில் பரிசு கூப்பனும் இருந்தது. உடனே அந்த கும்பல், ₹1 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு ₹10 ஆயிரம் செலுத்தினால் போதும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய சசிகலா அந்த கும்பலிடம் உடனே ₹10 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர், அந்த நபர்கள் ₹2,000 மதிப்பிலான ஏர்கூலரை கொடுத்துவிட்டு, மீதம் பொருட்கள் கூரியரில் வரும் என தெரிவித்து சென்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் சொன்னபடி பரிசு பொருட்கள் எதுவும் வரவில்லையாம். எனவே, அந்த நபர்கள் அளித்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சசிகலா, இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சோப்பு விற்பதாக வந்த கும்பல் பெண்ணிடம் நூதன மோசடி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: