ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்க கூடாது: மக்களவை சபாநாயகரிடம் எடப்பாடி மனு

புதுடெல்லி: அதிமுகவின் எம்பியாக ஓ.பி.ரவீந்திரநாத்தை அங்கீகாரம் செய்யக் கூடாது என எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக கட்சியின் எம்பியாக அங்கீகரிக்கக் கூடாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் படி மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் நேற்று மனு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அதில் கூறியிருப்பதாவது: தேனி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்யப்ப்பட்டார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நான் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இவை அனைத்திற்கும் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்துள்ளது.

அதனால் அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓ.பி.ரவீந்திநாத் அதிமுகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக எந்த உரிமையும் கோர முடியாது. அதேப்போன்று மக்களவை உறுப்பினருக்கான சிறப்புரிமைகளையும் அவர் கோருவதற்கு தகுதி கிடையாது. அதனால் ஓ.பி.ரவீந்தரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்க கூடாது: மக்களவை சபாநாயகரிடம் எடப்பாடி மனு appeared first on Dinakaran.

Related Stories: