சமயபுரம் அருகே காரில் கடத்தி வந்த ₹6லட்சம் குட்கா பறிமுதல்-4 பேர் அதிரடி கைது

சமயபுரம் : சமயபுரம் அருகே நேற்று காரில் கடத்தி வந்த ₹6 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்பிளாசா அருகே நேற்று டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், எஸ்ஐ ராஜசேகர், முத்துசாமி மற்றும் போலீஸ்காரர் பாண்டியராஜன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 3 கார்களை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் அந்த கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 3 கார்களையும், அதிலிருந்து குட்கா புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் (36), பெங்களூரை சேர்ந்த அமீர்சிங் (38), சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41), தச்சன்குறிச்சியை சேர்ந்த மணிராஜ் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆயிரம் கிலோ (ஒரு டன்) குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ₹6லட்சம்.

The post சமயபுரம் அருகே காரில் கடத்தி வந்த ₹6லட்சம் குட்கா பறிமுதல்-4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: